தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 1000 கிலோ சாதத்தால் அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பெரிய கோவில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கமும் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெருவுடையாருக்கு ஐப்பசி மாத பெளர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.
அதன்படி ஐப்பசி மாத பௌர்ணமியை ஓட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் வழங்கிய 1000 கிலோ அரிசியை சாதமாக தயார் செய்யப்பட்டன. பின்னர் தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டன.
இதையடுத்து வெங்காயம் தக்காளி கத்தரிக்காய் மாங்காய் பூசணிக்காய் சுரைக்காய் முட்டைகோஸ் கேரட் ஆப்பிள் சாத்துக்குடி ஆரஞ்சு உள்ளிட்ட 500 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்து நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இரவில் லிங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அன்னம் பக்தர்கள், கால்நடைகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.