டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சென்னை: நடப்பாண்டு ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இடைநிலை ஆசிரியர்கள் டெட் தாள் 1 தேர்விலும், பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தாள்-2லும் தேர்ச்சி பெற வேண்டும். 2025ம் ஆண்டுக்கான டெட் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 11ம் தேதி தொடங்கியது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 10ம் தேதி (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி டெட் தேர்வுக்கான காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. நேற்று காலை நிலவரப்படி 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெட் தேர்வுக்கு (தாள் 1 மற்றும் தாள் 2) விண்ணப்பித்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் டிஆர்பி இணையதளத்தை (www.trb.tn.gov.in) பயன்படுத்தி இன்று மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பயிலும் மாணவர்களும், பிஎட் 2ம் ஆண்டு படிப்பவர்களும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். டெட் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் தங்கள் படிப்பை முடித்த பிறகு டெட் தேர்ச்சி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.