காஷ்மீரில் பயங்கரம் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
குப்வாரா: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கேரான் செக்டார் பகுதியில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். இந்த கூட்டு நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் பிம்பிள்’ எனப் பெயரிடப்பட்டது. நேற்று (நவ. 7) தொடங்கிய இந்த தேடுதல் வேட்டையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை கண்டறிந்த வீரர்கள், அவர்களை நோக்கி முன்னேறினர். இன்று (நவ. 8) காலை, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த இந்த கடும் துப்பாக்கிச் சண்டையின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதி மிகவும் கரடுமுரடான மற்றும் தொலைதூரப் பகுதி என்பதால், வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக தேடுதல் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.