மான்செஸ்டரில் பயங்கரவாத தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்
புதுடெல்லி: மான்செஸ்டர் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத வழிபாட்டுத் தலத்தின் மீது நேற்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டம் மீது காரை மோதி, பின்னர் கத்தியால் குத்திய இந்த கொடூர சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘இந்த கொடூரமான தாக்குதல், பயங்கரவாதத்தின் தீய சக்திகளிடமிருந்து நாம் எதிர்கொள்ளும் சவால்களை மீண்டும் கடுமையாக நினைவூட்டுகிறது.
சர்வதேச அகிம்சை தினத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி, அதைத் தோற்கடிக்க உலக சமூகம் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மான்செஸ்டர் நகர மக்களுக்காக பிரார்த்திக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.