டெண்டர் 2026 மார்ச் 31 வரை நீட்டிப்பு எல்ஜிபி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: எல்.பி.ஜி. எரிவாயு சப்ளை செய்யும் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் முடிந்ததையடுத்து புதிய ஒப்பந்தங்களை வழங்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. இந்த டெண்டர் நடைமுறைகள் முடிந்து, பணிகள் ஒதுக்கும் வரை தற்போதைய ஒப்பந்தங்கள் 2025 அக்டோபர் வரையும், 2026 பிப்ரவரி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அக்டோபர் 9 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் மாதம் 31 வரை நீட்டிக்க தயாராக இருப்பதாகவும், இடைப்பட்ட காலத்தில் புதிய டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதை லாரி டேங்கர் சங்கங்களும் ஏற்றுக்கொண்டன. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் 31 வரை நீட்டிக்க உத்தரவிட்டார். இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று டேங்கர் லாரிகள் சங்கத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, காஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.