மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்.. மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரியது டிட்கோ நிறுவனம்!!
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.2025-26ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார். அதில், பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வீட்டு வசதிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட புதிய குளோபல் சிட்டி அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஐந்து இடங்களை அடையாளம் கண்ட ஆய்வு நிறுவனங்கள் டிட்கோவுக்கு அறிக்கை சமர்ப்பித்தன.அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.இந்த நிலையில், சர்வதேச நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்(டிட்கோ) டெண்டர் கோரியுள்ளது. மதுராந்தகத்தில் புதிய சர்வதேச நகரம் அமைக்கப்பட்டதும் அங்கு, பல்வேறு பன்னாட்டு முதலீடுகள் வரும் என்பதுடன் ஏராளமான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.