பரம்பரை பரம்பரையாக கோயில் அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை : கேரள உயர்நீதிமன்றம் கருத்து
திருவனந்தபுரம் :பரம்பரை பரம்பரையாக கோயில் அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தந்த்ர வித்யாலயா என்ற அமைப்பு மூலம் அனுபவ சான்றிதழ் பெற்றவர்களை பகுதி நேர அர்ச்சகர்களாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பணியாளர் போர்டு நியமித்தன. இந்த நியமனத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அகில கேரள தந்த்ரி சமாஜம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், "பரம்பரை பரம்பரையாக கோயில் அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்தான் கோயில் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்பது அவசியமான மத வழக்கம் அல்ல. ஆகவே தந்த்ர வித்யாலயா என்ற அமைப்பு வழங்கிய அனுபவ சான்று அடிப்படையில் குருக்களாக சிலரை நியமித்தது செல்லும்." என தெரிவிக்கப்பட்டது. 1972ல் சேஷம்மாள் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி கேரள ஐகோர்ட் இவ்வாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.