தெலங்கானாவுக்கு ரூ.50 லட்சம் வெள்ள நிவாரண நிதி: நடிகர் பாலகிருஷ்ணா அறிவிப்பு
திருமலை: தெலங்கானாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்குவதாக நடிகர் பாலகிருஷ்ணா அறிவித்தார். தெலுங்கு திரையுலகத்தில் 50 ஆண்டுகள் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருபவர் பாலகிருஷ்ணா. இதற்காக அவர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். இதற்கான விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது.
அப்போது நடிகர் பாலகிருஷ்ணா பேசுகையில், தெலங்கானாவில் பெய்த மழையால் பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்களின் கண்ணீரை யாராலும் துடைக்க முடியாது. மழைவெள்ளம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளும் உள்ளூர் மக்களும் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கவலை கொள்கிறேன். எனவே வெள்ள நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
* ரஜினிகாந்த் வாழ்த்து
முன்னதாக நடிகர் பாலகிருஷ்ணாவை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், கத்தியால் இல்லை, கண் பார்வையிலேயே கொன்று விடுவேன் என்று பல ‘பன்ச்’ வசனம் பாலகிருஷ்ணாவிற்கு மட்டுமே பொருந்தும். வேறு யார் சொன்னாலும் பொருந்தாது. பாலய்யா என்றால் பாசிடிவ் எனர்ஜி, அவர் எங்கிருந்தாலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பாலகிருஷ்ணா படம் வெற்றி பெற்றால், அது அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, மற்ற அனைத்து ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள்.
அவர் 50 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்துள்ளார். அவர் மேலும் அவரது பாசிடிவ் எனர்ஜியுடன் தொடர்ந்து படங்கள் நடித்து 75 ஆண்டு சாதனை புரிய வேண்டும் என இறைவனை வேண்டி கொள்கிறேன் ‘ஐ லவ் யூ பாலய்யா’ என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ விழாவில் வெளியிடப்பட்டது.