தெலங்கானாவில் 37 நக்சலைட்கள் போலீசில் சரண்
ஐதராபாத்: தெலங்கானாவில் 37 நக்சலைட்கள் போலீசில் சரணடைந்துள்ளனர். நக்சலைட்கள் அனைவரும் ஆயுதங்களை கைவிட்டு, வரும் மார்ச் மாத இறுதிக்குள் போலீசில் சரணடைய வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதல் ‘ஆபரேஷன் ககார்’ அல்லது ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் என்ற பெயர்களில் நக்சல்களை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றிய பாதுகாப்பு படைகளும், மாநிலங்களின் ஆயுதப்படையும் இணைந்து வனப்பகுதிகளில் பதுங்கியுள்ள நக்சலைட்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறன. இதனால் நக்சலைட்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெறும் துப்பாக்கி சண்டையில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் வனப்பகுதிகளில் பதுங்கியிருந்த 37 நக்சலைட்கள் நேற்று ஐதராபாத்தில் தெலங்கானா மாநில டிஜிபி சிவதர் ரெட்டி முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். இவர்களில் 34 பேர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 23 பேர் பெண்கள். இவர்கள், தங்களிடம் இருந்த 8 துப்பாக்கிகள் மற்றும் 343 தோட்டாக்களை ஒப்படைத்துள்ளனர். இதில் ஒரு ஏகே-47 மற்றும் 2 எஸ்எல்ஆர் துப்பாக்கிகளும் அடங்கும். சரணடைந்த அனைவருக்கும் அரசு மறுவாழ்வு திட்டங்கள், சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான உதவிகள் மற்றும் முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று டிஜிபி உறுதியளித்துள்ளார். மேலும் இவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதோடு, உடனடி உதவியின் கீழ் தலா ரூ.25,000 நிதி உதவியும் வழங்கப்படுகிறது.