டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் : உச்சநீதிமன்றம்
டெல்லி : டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக ED நடத்திய சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு விசாரித்தது. அப்போது, அமலாக்கத்துறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கூறும் கருத்துக்கள் ஊடகத்தில் மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்கள் வரை பரவுவதாக அமலாக்கத்துறை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதற்கு கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, "நாங்கள் தனி நபரையோ அல்லது அமைப்பையோ தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. மாறாக வழக்கின் தன்மையை பொறுத்தே நாங்கள் கருத்துக்களை கூறுகிறோம். வழக்கில் கருத்து கூறினால் EDக்கு எதிராக பேசுவதாக ஒன்றிய அரசின் வழக்கறிஞர் கூறுவார்"என தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, டாஸ்மாக் வழக்கில் ED அவகாசம் கோரியதால் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.