தமிழ்நாட்டு அரசியலில் பாசிஸ்ட்டுகளைப் பார்த்து அடிமைகள் பம்முகிறார்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் அடிமைகள் பாசிஸ்ட்டுகளைப் பார்த்து பயப்படுகிறார்கள், பம்முகிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக 13 ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் ஆளுங்கட்சியை சட்டசபையில் கேள்விகளாலும், தங்களுடைய சிறப்பான வாதங்களாலும் அதிரச் செய்தவர்கள் 3 பேர். அதில், ஒருவர், இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக் கூடிய ரகுமான்கான். மற்றொருவர், பொதுச் செயலாளர் துரைமுருகன், அடுத்தது அய்யா க.சுப்பு. இவர்களை தான், திமுகவின் தலைவரும், திமுகவின் உடன்பிறப்புகளும் கழகத்தின் இடி, மின்னல், மழை என்று புகழ்ந்தார்கள்.
அந்த வகையில், நம்முடைய இன எதிரிகள் மீது தன் பேச்சாற்றலால் இடியாக இறங்கியவர் தான் ரகுமான்கான். கலைஞருடைய மனம் கவர்ந்த பேச்சாளராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். கலைஞரின் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்தவர். ரகுமான்கான் விரும்பியது போல, இன்றைக்கு முதல்வராகவே வந்து அவருடைய நூல்களை நம்முடைய தலைவர் வெளியிடுகிறார். இது தான் திராவிட இயக்கம். இதுதான் திமுக தொண்டர்களுக்கும் தலைவருக்கும் உள்ள பாசப்பிணைப்பு. இந்த உணர்வு தான், இந்த இயக்கத்தை இன்றைக்கும் உயிரோட்டமாக வைத்திருக்கிறது.
இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் அடிமைகள் பாசிஸ்ட்டுகளைப் பார்த்து பயப்படுகிறார்கள், பம்முகிறார்கள். இந்த அடிமைகளுக்காக, அன்றைக்கே ஒரு ஹைக்கூ கவிதையை ரகுமான் கான் மாமா எழுதி இருக்கின்றார். ‘‘மன்னராக இருந்தாலும்.. மண்டியிடாது.. மண் பொம்மை”. ஆனால், மண் பொம்மைகள் கூட செய்யாததை, இன்றைக்கு சில அடிமைகள் டெல்லியிடம் செய்து கொண்டிருக்கிறார்கள். ரகுமான்கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட நாம் அத்தனை பேரும் உறுதியேற்போம்.