தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு உத்தரவு அளித்துள்ளது. தமிழகத்தில் மீன்பிடிப்பு மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடும் மீனவத் தொழிலாளர்களின் விரிவான சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களது நலனை பேணும் பொருட்டும், கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் அமைக்கப்பட்டது.
உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மீனவர் நல வாரியம் அவர்களின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்தது. தமிழ்நாடு மீனவர் நல வாரியத்திற்கு கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ளபடி அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை இரண்டாண்டு காலத்திற்கு நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது. மேற்படி நியமனம் செய்யப்பட்ட, தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலத்திற்கு பதவி வகிப்பர்.
தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் தலைவராக கன்னியக்குறி மாவட்டம் குளச்சல், ஜோசப் ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அலுவல் சாரா உறுப்பினர்கள்: A. தாஜுதீன், N. J. போஸ், P. அந்தோணி ஸ்டாலின், A. ஜோஸ், V. செல்வபாரதி, R.V. கணேஷ், A.P. பன்னீர்செல்வம், M. முருகன், X. லெனின், கோ. மனோகரன், M. ஜெபமாலை பர்னாந்து, ஜேசுராஜா, P.S.ஜேசுராஜ் (எ) ராஜா, ஆகியோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் செயலர் என்ற முறையில் நல வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பார். இந்நல வாரியம் முதல் தரமான குழுவாகக் கருதப்படும். அலுவல் சாரா உறுப்பினர்களின் அகவிலைப்படி மற்றும் பயணப்படி போன்றவற்றிற்கு வாரியத்தின் உறுப்பினர் செயலரால் ஒப்பளிக்கப்பட வேண்டும். வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் அரசு பதவிகளில் இருந்தால், அவர்கள் நல வாரியத்திலிருந்து ஏனைய பயன்பாடுகளை பெறமுடியாது.