தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 2 பெண்கள் உள்பட 3 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் தகைசால் விருது: ஒன்றிய உள்துறை அமைச்சம் அறிவிப்பு
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 2 பெண் உள்பட 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் தகைசால் பணி விருதும், 21 பேருக்கு குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருதுகள் என மொத்தம் 24 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான வீரதீர சேவைக்கான விருது, மிக சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான விருது மற்றும் மெச்சதக்க சேவைக்கான விருது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு சார்பில் குடியரசு தலைவரின் தகைசால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் நாடு முழுவதும் மாநிலம் வாரியாக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 200 காவல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரிகள் உள்பட மொத்தம் 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பால நாகதேவி, சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்தியேன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி லட்சுமி ஆகிய 3 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியரசு தலைவரின் மெச்சத்தக்க பணிக்கான விருது தமிழகத்தை சேர்ந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் எஸ்பி ஜெயலட்சுமி, சென்னை பெருநகர நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர் சக்திவேல், நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா, சென்னை பாதுகாப்பு பிரிவு குற்றப்பிரிவு டிஎஸ்பி துரைப்பாண்டியன், திருச்சி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பி கோபாலசந்திரன், சென்னை சிறப்பு பிரிவு, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் எஸ்பி சுதாகர் தேவசகாயம்,
கோவை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர், தாம்பரம் மாநகர சேலையூர் உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசில், சென்னை பெருநகர ஆயுதப்படை டிஎஸ்பி முருகராஜ், சென்னை பெருநகர தரமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன், திருநெல்வேலி தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் அதிசயராஜ், வேலூர் மாவட்டம் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜனிகாந்த், ஈரோடு சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பா.ரஜினிகாந்த், சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவு சிறப்பு எஸ்ஐ ஸ்ரீவித்யா,
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் அனந்தன், பெரம்பலூர் மாவட்டம் சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் கண்ணுசாமி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன், சென்னை சிறப்பு புலனாய்வுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப்பிரிவு உதவி ஆய்வாளர் கணேசன், சேலம் மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் என மொத்தம் 21 அதிகாரிகளுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.