தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை உடனே அகற்றவேண்டும்: அசம்பாவிதம் ஏற்பட்டால் அதிகாரிகளிடம் இழப்பீடு, ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி உத்தரவு
மதுரை: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அருளரசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தேர்தல் வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போது பேனர்கள் மற்றும் பதாகைகளை வைத்து வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பொதுச்சாலைகள், பாதைகள் மற்றும் நடைபாதைகளில் சட்டவிரோத பதாகைகள், வளைவுகள், பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளவர்கள், வைப்போர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள் முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: பொது சாலைகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள்,பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்ற வேண்டும். அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை, கடமைகளை செய்வதற்குத்தான் மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறுகின்றனர்.
உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோத பிளக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்காத நிலையில், அவற்றால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், தங்கள் கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது உரிய சட்ட மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத பிளக்ஸ் பேனர்களை கண்டறிந்து அகற்றுவது, தொடர்புடைய துறைகளில் உள்ள அரசு அதிகாரிகளின் கடமை.
நிர்வாக பணியில் உள்ள அதிகாரிகள் இந்தக் கடமையை செய்வதற்கு உயர்நீதிமன்றத்தை நாடுவது ஏற்புடையதல்ல. பிளக்ஸ் பேனர்களை அகற்றாமல், ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு ஈடாக தொடர்புடைய அதிகாரியிடம் இருந்து தான் இழப்பீடு வசூலிக்க வேண்டும் என உத்தரவிட நேரிடும்.
எனவே, தமிழ்நாடு முழுவதும் பொதுச்சாலைகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டு உள்ளிட்டவற்றை, தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தாமதமின்றி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றியது தொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.