உயிலட்டி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மலைக்காய்கறிகளான முட்டைகோஸ், கேரட், புரூக்கோலி, மலைப்பூண்டு, பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் கூக்கல்தொரை அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் உறைபனி, நீர்ப்பனியின் தாக்கம் அதிகரித்து மழை இல்லாமல் ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், சிற்றோடைகள் அனைத்திலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கூக்கல்தொரை பகுதியில் மலைக்காய்கறிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து குறைந்தது காணப்பட்ட நிலையில் விவசாயத்திற்கு போதிய நீர் கிடைக்காததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். கடந்த சில நாட்களாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்த நிலையில் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கூக்கல்தொரை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலைக்காய்கறிகள் விவசாயத்திற்கு ஏற்ற தண்ணீர் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.