தெருநாய்கள் தொல்லை தொடர்பான வழக்கு; மாநில தலைமைச் செயலாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்: 7ம் தேதி புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் வெளியாகிறது
புதுடெல்லி: தெருநாய்கள் தொல்லை தொடர்பான வழக்குகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக விசாரணையில் உள்ளது. முன்னதாக, விலங்குகள் இனக்கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மதிக்காததால், சில மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தது. இந்த பின்னணியில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.
இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அன்ஜாரியா அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி, விதிகளைப் பின்பற்றியது தொடர்பான பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இனிவரும் விசாரணைகளில் அவர்கள் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தனர். அதேசமயம், எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என்றும் கடுமையாக எச்சரித்தனர். மேலும், இந்த வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரியத்தையும் ஒரு எதிர்வாதியாகச் சேர்த்த நீதிபதிகள், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை வைப்புத்தொகை நிபந்தனையின்றி அனுமதித்தனர்.
விசாரணையின் போது, அரசு அலுவலக வளாகங்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பது குறித்து நீதிபதிகள் முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டனர். இதுகுறித்து நீதிபதி விக்ரம் நாத், ‘அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அங்குள்ள நாய்களுக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கும் விவகாரம் தொடர்பாக சில நாட்களில் உத்தரவு பிறப்பிப்போம். வரும் புதன் கிழமைக்குள் மூத்த வழக்கறிஞர் கவுரவ் அகர்வால், அனைத்து மாநில அரசுகளில் சார்பில் தாக்கல் ெசய்யப்பட்ட பிரமாண பத்திரங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி ஒருங்கிணைந்த குறிப்பை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வழக்கில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டியிருந்தால், பதிவாளரிடம் உரிய கட்டணத்தை செலுத்தி புதிய மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுவையும் விசாரித்த வரும் 7ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். அன்றைய தினம் ெதருநாய்கள் ெதாடர்பான வழக்கில் வழிக்காட்டல் நெறிமுறைகள் அறிவிக்கப்படும்’ எனக்கூறி வழக்கு விசாரணையை 7ம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.