பொதுமக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டுப்பாட்டு அறை: மேயர் திறந்து வைத்தார்
இதுகுறித்து மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் கண்காணிப்பதற்கு தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி ஆணையர் தலைமையில் தொடங்கி வைத்திருக்கிறோம். தூய்மை பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு தெருவாரியாக ஒரு க்யூஆர் கோடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எல்லா பணிகளையும் ஜிபிஎஸ் ட்ராக்கர் மூலமாக கண்காணிக்க முடியும். இதுதவிர மழை மற்றும் வெள்ள நாட்களில் பாதிப்பு அடையக்கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் சிசிடிவி கேமரா மற்றும் சென்சார்கள் மூலமாக அதனை கண்காணிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும், தெரு விளக்குகள் சரியான வகைகளில் எரிகின்றனவா என தொடர்ந்து கண்காணிப்பதற்கான செயல்பாடுகளும் இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும். தாம்பரம் மாநகராட்சியில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வாய்ஸ் ஆப் தாம்பரம் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதை அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த செயலியில் மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றங்களை செய்து மக்கள் கையில் கொண்டு சேர்ப்பதற்காகவும் அந்த செயலியின் செயல்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கான பணிகளும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டலக் குழுத் தலைவர்கள் டி.காமராஜ், வே.கருணாநிதி, ச.ஜெயபிரதீப், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.