அடுத்த ஆண்டு தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணி நடக்கிறது குரூப் 4 ரிசல்ட் அக்டோபர் 4வது வாரத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி
சென்னை: குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் அக்டோபர் 4 வாரத்தில் வெளியிடப்படும். அடுத்த ஆண்டு தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணி நடக்கிறது என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அறிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேற்று அளித்த பேட்டி: அடுத்த ஆண்டு தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணி டிஎன்பிஎஸ்சியில் சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 15504 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 9725 பணிகளுக்கான வேலைகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 4வது வாரத்தில் வெளியிடப்படும். பொதுவாக வினாத்தாள்கள் பல கட்டங்களில் தயாரிக்கப்படுகிறது. ரகசியம் கருதி ஒரே கட்டமாக தயாரிக்கப்படுவதில்லை. அதுவும் பலக்கட்ட பரிசீலனை செய்யப்படுகிறது.
அதனுடைய மொழி பெயர்ப்பு பற்றியும், பாடத்திட்டத்தில் இருக்கிறதா, வெளியியே இருக்கிறதா என்று பல்வேறு சப்ஜெட் நிபுணர்கள் பார்க்கிறார்கள். நாங்கள் அதை நேரடியாக பார்க்க கூடாது. சப்ஜெட் நிபுணர்கள் பரிசீலனை பண்ணி அதை சீல் வைத்து, அதன் பிறகு தான் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. ஒரு சில சமயம் அச்சு பிழை, மொழி பெயர்ப்பு பிழை வந்து கொண்டு தான் இருக்கிறது.
அது எங்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது. முடிந்தவரை தவறுகள் இல்லாமல் தயாரிக்கும்படி நிபுணர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அதுபோல சில தவறான கேள்விகளை செட் செய்யக்கூடிய அந்த நிபுணர்கள் இந்த பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.
ஒரு சில நேரங்களில் தவறான கேள்விகள் வந்து விட்டால், மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அதனை நிபுணர் குழுவால் ஆராய்ந்து, அதில் எந்த அளவுக்கு மாணவர்களுக்கு பலன் கொடுக்க வேண்டும் என்று சொல்லி மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்து கொள்கிறோம். தேர்வுக்கான ஓஎம்ஆர் சீட்டில் பொதுமான அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது. கரூர் மாவட்டத்தில் தேர்வு நடப்பதில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. தேர்வுகள் சமூகமாக நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.