இரு காற்றின் இணைவால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: இரு காற்றின் இணைவு காரணமாக, வரும் 3 நாட்களில் தமிழகத்தில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட கடலோரப் பகுதி முதல் டெல்டா வரையில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், கரூர் மாவட்டத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
அதேபோல, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளன. மேற்கண்ட வானிலை நிகழ்வுகளின் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநிலை 15ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, 11ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-3டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.