தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், திமுக கூட்டணி கட்சிகள் இதை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
செல்வப்பெருந்தகை (மாநில காங்கிரஸ் தலைவர்): தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை கண்டித்தும், கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.
சண்முகம் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், தமிழக நலனுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். உச்ச நீதிமன்றம் ஆளுநர்களின் அதிகார வரம்பு குறித்து கூறிய பிறகும், திருந்த மறுக்கிறார்.
கலைஞர் பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி உச்ச நீதிமன்றம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என்று செயல்பட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அணுகுமுறையை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டிய ஆளுநர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை. கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை கடைசி நாள் வரை கிடப்பில் போட்டு வைத்து, இறுதியாக குடியரசு தலைவர் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆளுநர் அத்துமீறல் தொடரும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காது, புறக்கணிக்கிறது.
திருமாவளவன் (விசிக தலைவர்): வழக்கம்போல ஆளுநர் சுதந்திர நாள் விழா தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எமது நன்றி. அதேவேளையில் வழக்கம்போல விழாவில் விசிக பங்கேற்காது.
ஜவாஹிருல்லா (மமக தலைவர்): ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் தேவையற்ற மோதல்களை அவர் உருவாக்கி வருகிறார். மாநில அரசின் அதிகாரத்தையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஜனநாயக செயல்பாடுகளையும் தொடர்ச்சியாக சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதால் அவரது தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.