தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகன பதிவுச்சான்று மேலும் ஓராண்டு நீட்டிப்பு
சென்னை: 15 ஆண்டுகளை கடந்த அரசுக்கு சொந்தமான வாகனங்களின் பதிவு சான்றிதழ் 1.4.2023 முதல் ரத்து செய்யப்பட்டது. இத்தகைய வாகனங்களுக்கான பதிவுச்சான்றை ஒன்றிய அரசின் வாகன் இணையதளம் வாயிலாக ரத்து செய்தும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மேலும் ஓராண்டு பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 12,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் பொதுத்துறை வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலம் விரைவில் முடிவடையவுள்ளது. தலைமைச்செயலாளரின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இந்த வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு, அதாவது 30.9.2026 வரை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மேலும் ஓராண்டு பயன்படுத்த அனுமதித்து தமிழக அரசு தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்பட அரசுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேலான 6,247 வாகனங்களுக்கு வரி, கட்டணம் போன்றவற்றை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேரடியாக வசூலித்து, பதிவுச் சான்றை புதுப்பித்து வழங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், அந்த வாகனங்களின் பதிவுச்சான்று செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான 12,000 வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை 30.9.2026 வரை நீட்டிக்க மாநில போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.