தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க விஜய் வலியுறுத்தல்
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நம் மீனவ சகோதரர்கள் 35 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை தருகிறது. கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவ சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையை போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும்” என அறிக்கையில் கூறியுள்ளார்.