தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.4.41 லட்சம் கோடியாக உயர்வு
சென்னை: தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 635 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 184 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 11.92 சதவீத பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து ரூ. ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 127 கோடியும், சென்னை மாவட்டத்திலிருந்து ரூ.65 ஆயிரத்து 479 கோடி மதிப்பிலும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. திருப்பூரிலிருந்து ரூ.39 ஆயிரத்து 618 கோடி மதிப்பிலும், கோவை மாவட்டத்திலிருந்து ரூ.29 ஆயிரத்து 763 கோடி மதிப்பிலும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ரூ.27 ஆயிரத்து 936 கோடி மதிப்பிலும், செங்கல்பட்டு மாவட்டம் ரூ. 20 ஆயிரத்து 640 கோடி மதிப்பிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ஏற்றுமதி 70 சதவீதமாக உயர்ந்து ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்து 182 கோடி மதிப்பில் ஏற்றுமதியாகியுள்ளது.