தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் 18ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. கரூர், திருநெல்வேலி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்தும், தஞ்சாவூர், கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பநிலை அதிகரித்தது.
தர்மபுரி, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்தும், சென்னை, கடலூர், வேலூர், மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி வரை குறைந்தும் காணப்பட்டது. இந்நிலையில், பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரை, கரூர் 100 டிகிரி, திருச்சி, ஈரோடு 99 டிகிரி, சென்னையில் இயல்பை ஒட்டியும் வெயில் நிலவியது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நேற்று நகர்ந்து மத்திய விதர்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்து சென்றது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இந்த இரு நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 16ம் தேதியில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
17ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 18ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மேற்கண்ட மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.