வரும் 25ஆம் தேதி கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடைபெறும்: அமுதா ஐ.ஏ.எஸ். அறிவிப்பு
சென்னை: வரும் 25ஆம் தேதி கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடைபெறும் என தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கல்வியில் சிறந்த தமிழ்நாடு கொண்டாட்டம் வரும் வியாழக்கிழமை அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. விழாவில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்க உள்ளார். நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 14,60,000 குழந்தைகள் பல்வேறு திறன்களை பெற்றுள்ளனர். உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட திறன்களில் மாணவர்கள் பயிற்சி பெற திட்டம். கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாளக நேர்காணல் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர். கல்லூரிகளில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம்களில் வேலை கிடைக்காதவர்களுக்கும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை கிடைக்கும்.
2,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப்பித்துள்ளனர். 20,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். 37,416 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 3.92 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 5.29 லட்சம் மாணவிகள் பயன்பெறுகிறார்கள். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.150 கோடி பரிசு தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ.548 கோடியில் விளையாட்டுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 77 சட்டமன்ற தொகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கிராமபுரத்தில் விளையாட்டை மேம்படுத்த கலைஞர் விளையாட்டு கருவிகள் வழங்கும் திட்டம் 12,620 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. கலைஞர் விளையாட்டு கருவிகள் வழங்கும் திட்டத்துக்காக ரூ.86 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.