தமிழகம் முழுவதும் 12,480 ஊராட்சிகளில் நடைபெற்றது கிராம சபை தீர்மானம் திட்டங்களாக நிறைவேறும்: காணொலிக்காட்சி மூலம் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த 12,480 கிராம சபை கூட்டத்தில் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழகம் முழுவதும் 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: என்றைக்கும் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றக்கூடிய இந்த எண்ணத்தை நமக்குள் விதைத்தவர் அண்ணா. அவர்தான் மக்களிடம் செல், அவர்களிடம் வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய் என்று நமக்கு கட்டளையிட்டு நம்மையெல்லாம் ஆளாக்கியவர். அண்ணா காட்டிய பாதையில்தான் கலைஞர் சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் போன்ற உயர்ந்த லட்சியங்களை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு திமுக ஆட்சியை வழிநடத்தினார்.
கலைஞர் வழித்தடத்தில்தான் நம்முடைய திராவிட மாடல் அரசும் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி சமத்துவம், சமதர்மம், சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது. நாட்டுக்கே வழிகாட்டும் ஏராளமான திட்டங்களை நீங்கள் உருவாக்கிய திராவிட மாடல் அரசு உருவாக்கி இருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தையும், பெண்கள் முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்திய மாபெரும் திட்டம் மகளிர் சுயஉதவிக்குழு திட்டம். உங்களில் நிறையபேர் சுயஉதவி குழுக்களால் பயனடைந்து இருப்பீர்கள். நான் துணை முதல்வராக இருந்தபோது பல மணி நேரம் மேடைகளில் நின்று சுழல்நிதி வழங்கி இருக்கிறேன்.
இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகத்தான் ‘மகளிர் உரிமைத்தொகை’ கொடுக்கிறோம். நீங்கள் எல்லோரும் கட்டணம் இல்லாமல் பஸ்சில் போகிறீர்கள். அந்த விடியல் பயண திட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வளவு பெரிய பங்களிப்பை செலுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள். நீங்கள் காலையில் சீக்கிரம் வேலைக்கு போக வேண்டும் என்று அவசர அவசரமாக கிளம்புவீர்கள். அதற்கு நடுவில் சமையல் செய்ய வேண்டும். அந்த சுமையை குறைக்க அரசு பள்ளியில் படிக்கும் நம்ம குழந்தைகளுக்கு சத்தாகவும், சுவையாகவும் காலை உணவு கொடுக்கிறோம்.
நம்ம வீட்டு பசங்க கல்லூரி முடித்துவிட்டு வேலைக்கு போகும் அளவுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறோம். நம்ம பசங்க படித்து முன்னேறி வர வேண்டும் என்று புதுமைப் பெண், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒவ்வொரு துறையிலும் பல திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இதெல்லாம் முத்திரை திட்டங்கள்.
இதேபோல கிராம வளர்ச்சிக்கென்று பல திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
கிராம மக்கள் தங்களுடைய ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவும், வளர்ச்சி பாதையில் கிராம ஊராட்சியை கொண்டு செல்லவும் உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம். அதற்காக ஆண்டுதோறும் 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ‘நம்ம ஊரு நம்ம அரசு’ என்கிற பெயரில் கிராம சபையில் மக்கள் ஆலோசித்து மூன்று முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி கண்டறியப்படும் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகிறதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யும்.
குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிடும் வகையில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற புரட்சிகர திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 2 லட்சம் வீடுகள் கட்ட முடிவு எடுத்து 2024-25 வரை 99,453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. 2025-26ல் இன்றைய நிலையில் 78 ஆயிரத்து 312 வீடுகள் கூரை மட்டம் நிலைக்கு மேல் முன்னேற்றத்தில் இருக்கிறது. அதேபோல, சாலை வசதிகளை பொறுத்தவரைக்கும் 2022-23ம் ஆண்டில் அறிமுகமான முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம். நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 21 ஆயிரம் கி.மீட்டருக்கும் அதிகமான சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்படுத்தி இருக்கிறோம்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள், நூலக வசதிகள் போன்ற சேவைகள் விரிவாக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் நம்ம குழந்தைகள் படிக்கிறதை உறுதி செய்ய வேண்டும். எங்காவது, யாராவது குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால் உடனே மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்து அவங்களை மீட்க வேண்டும். இதை கிராம ஊராட்சிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பொறுப்போடு கண்காணிக்க வேண்டும். கிராம மேம்பாட்டுக்கு முக்கியமான திட்டமான 100 நாள் வேலை திட்டம்.
இந்த திட்டம் முறையாக செயல்பட்டு வருவதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் வரவு-செலவு எவ்வளவு? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என எல்லா தகவல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும். நம்ம வீடு குப்பையாக இருந்தால் சும்மாவா இருப்போம். அதேபோன்று கிராமங்களை சுத்தமாக வைக்கும் பொறுப்பு நமக்குத்தானே இருக்கிறது. முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வகை செய்ய வேண்டும்.
குப்பையை ஊராட்சிகளில் வருகின்ற பேட்டரி வண்டிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து போட வேண்டும். கண்ட இடத்தில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும். ஊராட்சி அலுவலர்கள் குப்பையை பராமரிப்பது, கழிவுநீர் மேலாண்மை பற்றியெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்னடா, இதெல்லாம் சின்ன சின்ன விஷயமாச்சே, இதுபற்றியெல்லாம் முதல்வர் சொல்ல வேண்டுமா என்று நினைக்கிறீர்களா? சின்ன சின்ன விஷயங்களை நாம் சரியாக செய்தாலே பெரிய பெரிய நன்மைகள் நிச்சயம் உண்டாகும்.
நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம். நோயற்ற வாழ்வுக்கு சுகாதாரம்தான் அடிப்படை. மருத்துவ அலுவலர்களும், ஊராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டு கிராம மக்களின் ஆரோக்கியம் மேம்படும். அதனால் நம்ம கிராமங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதில் யாருக்கும் அலட்சியம் இருக்கக்கூடாது. அடுத்து, புவி வெப்பமடைதல். உங்களுக்கு நன்றாக தெரியும், இப்போதெல்லாம் முன்பு போல சரியான நேரத்துக்கு - சரியான அளவுக்கு மழை பெய்வதில்லை. இதற்கு காரணம், காலநிலை மாற்றம். இதுபற்றிய விழிப்புணர்வும், கிராம மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அடுத்து, மக்களுடைய முக்கிய பிரச்னையாக இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை. “பணத்தைத் தண்ணியாக செலவழிக்கிறார்கள்” என்று சில பேர் சொல்லுவார்கள். உண்மையில், “தண்ணியைத் தான் பணம் போல பார்த்து, பார்த்து செலவழிக்க வேண்டும்”. தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருப்பதற்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானது. இதனால்தான், நிலத்தடி நீர்வளம் மேம்பட்டு, கிராமங்களுக்கு நீண்டகால நீர்ப் பாதுகாப்பு ஏற்படும். இதற்கான பொறுப்பு, நம்முடைய எல்லோரிடமும் தான் இருக்கிறது. எனவே, இதற்காக அரசும், ஊராட்சிகளும் எடுக்கின்ற முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, அனைத்து ஊராட்சிகளிலும், அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். வீதிகள், குடிநீர், மின்சாரம், வடிகால் போன்ற அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவசரத் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்புக் குழுக்களை அமைத்து, அவசர கால நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும். இதனால், பேரிடர் நேரங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கலாம்.
கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும். கிராம சபை மூலம் வரவு - செலவு கணக்குகள் மக்களிடம் விளக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலோடு செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியும் எப்போது, எவ்வளவு செலவிட்டது என்று மக்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் தகவல்கள் பகிரப்படவேண்டும். இந்த கூட்டத்தில், நீங்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. “கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை” என்று நம்முடைய செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். கிராம சபை கூட்டத்தில் அந்தந்த மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள், கலெக்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
* வேறெந்த முதல்வரும் பங்கேற்றதில்லை
நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது, கிராமங்கள்தான். கிராமங்களை முன்னேற்ற வேண்டும் - கிராம பொருளாதாரத்தை வலிமையாக்க வேண்டும் - கிராம நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்று ஜனநாயகப்பூர்வமாக சிந்தித்து, நாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டுக்கு அடிப்படை. அதனால்தான், நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, தொடர்ந்து கிராம சபை கூட்டங்களில் பங்கெடுத்தேன். உங்கள் ஆதரவோடு முதலமைச்சரான பிறகு, இப்போது மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கிறேன். இன்னும் பெருமையோடு சொல்கிறேன்; வேறெந்த முதலமைச்சரும் இப்படி கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை. அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபை கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.