“மாதவரத்தில் ஓரணியில் தமிழ்நாடு’’ திமுக உறுப்பினர் சேர்ப்பு
மாதவரம்: சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில், 17வது வார்டு வடபெரும்பாக்கம் பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. பகுதி செயலாளர் புழல் எம்.நாராயணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கருணாகரன், மூர்த்தி, பாலாஜி, பார்த்தசாரதி, திவாகர், வக்கீல் எம்.என்.தளபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள், மகளிர் உரிமைத் தொகை, வீடு தேடி கல்வி, காலை உணவு திட்டம் ஆகிய அரசின் திட்டங்களை வெளிப்படுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி வீடு, வீடாக சென்று மு.க.ஸ்டாலின் செய்துவரும் நலத்திட்டங்களை பொதுமக்கள், குடும்ப தலைவிகளிடம் எடுத்துரைத்தனர்.
அப்போது பொதுமக்கள், ‘’தாங்கள் தமிழக அரசின் பெரும்பாலான திட்டங்களில் பயனடைகிறோம்’ என்று தெரிவித்து முதல்வரை பாராட்டியதுடன் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு திமுகவில் உறுப்பினராக இணைந்தனர். அப்போது சிலர், ‘’பெருமாள் கோயில் தெருவில் சாலை அமைத்து தரவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். ‘’சென்னை மாநகராட்சியிடம் தெரிவித்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று புழல் நாராயணன் உறுதியளித்தார்.