தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில், 1 கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7,000 ஆக அதிகரிப்பு!!
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில், 1 கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை, 7,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றில், தங்க நகை அடமானம் பேரில், நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை பெரும்பாலான பொதுமக்கள் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள், இந்த கூட்டுறவு வங்கியை நாடுகிறார்கள். கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில், ஒரு கிராம் தங்கத்துக்கு, 6,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு 92,000 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் ரூ.12,000 வரை அதிகரித்து விற்பனையாகி வருகிறது. இதையடுத்து, கூட்டுறவு நிறுவனங்களில் 1 கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை, 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், நடப்பு நிதியாண்டின் ஏப்., முதல் அக்., வரை, 42 லட்சம் பேருக்கு, 45,000 கோடி ரூபாய் அளவுக்கு நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.