மைக்ரோசிப் துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பை அதிகரிக்க ரூ.500 கோடியில் செமி கண்டக்டர் இயக்கம்: 5 வகை திட்டங்களை செயல்படுத்த திட்டம்: அரசாணை வெளியீடு
சென்னை: செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் - 2030 திட்டத்தை செயல்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, 2030ம் ஆண்டுக்குள் மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் தொலைநோக்கின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம்-2030 திட்டத்தை கடந்த 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கலில் போது நிதியமைச்சர் தங்கம்தென்னரசு அறிவித்தார்.
அதன்படி இந்தியாவின் மைக்ரோசிப் துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பை பெருக்குவதற்காக, இத்திட்டம் சென்னை-ஓசூர்-கோயம்புத்தூர் பகுதியில் உயர்-தொழில்நுட்ப வழித்தடத்தை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. செமிகண்டக்டர் வடிவமைப்பு ஊக்குவிப்பு திட்டம், மையங்களை உருவாக்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் தொழில் பூங்காக்கள் அமைப்பது ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, மின்னணு உற்பத்தி சேவைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையும்.
அதன்படி இந்த இயக்கத்தை செயல்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செமி கண்டக்டர் வடிவமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.250 கோடி, செமி கண்டக்டர் சோதனை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செமி கண்டக்டர் உபகரணங்கள் ஒப்புதல் திட்டத்திற்கு ரூ.50 கோடி, சிறிய அளவிலான செமி கண்டக்டர் சிப் திட்டத்திற்கு ரூ.100 கோடி, இளைஞர்களுக்கு திறன்பயிற்சி அளிக்க ரூ.25 கோடி என்று 5 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் செமி கண்டக்டர் வடிவமைப்பு திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஊதிய வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான செமி கண்டக்டர் உற்பத்தி இளைஞர்களுக்கு திறன் பயிற்சிஅளிக்க ஏற்பாடு. செமி கண்டக்டர் உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் கோவை பல்லடத்தில் 100 ஏக்கரில் தொழில் பூங்கா அமைகிறது.
இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் 1000 பேருக்கு பயிற்சி அறிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் ஏற்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இன்னும் சில மாதங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இந்த இயக்கம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என தமிழ்நாடு அரசின் தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.