தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாள் : தமிழ்நாடு அரசு மரியாதை
சென்னை : தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளான 8.11.2025 அன்று காலை 8.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள், சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். "தேம்பாவணி" என்னும் தமிழ்க் காப்பியத்தைப் படைத்து வழங்கியவர் வீரமாமுனிவர். இவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். கிறித்தவ சமயத் தொண்டுக்காகத் தமிழகம் வந்து, தமிழின் சிறப்பினால் ஈர்க்கப்பட்டு, தமிழ்த் தொண்டராகவும் தமிழறிஞராகவும் ஆனார். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதே வீரமாமுனிவரின் இயற்பெயர். கிறித்தவ சமயப் பணி செய்வதற்காக, தமிழ் முனிவர்களைப் போலக் காவி ஆடை உடுத்தி அவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கி.பி.1710இல் இந்தியாவுக்கு வந்த வீரமாமுனிவர் கோவா, கொச்சி, அம்பலக்காடு வழியாக. மதுரை மாவட்டம் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியை வந்தடைந்தார்.
தமது சமயப்பணி தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில், தமக்குத் தமிழறிவு மிகவும் இன்றியமையாதது என்பதை நன்குணர்ந்து கொண்டார். இவர் தமக்கு முன்னால் தமிழகம் வந்து தமிழராகவே மாறி "தத்துவ போதகர்" எனப் பெயரை மாற்றிக் கொண்டு, தமிழ்ப்பணி புரிந்த இராபர்ட்-டி நொபிலி என்னும் மேலைநாட்டு இறையடியாரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர்போலவே தாமும் இறைப்பணியைச் செய்திட விரும்பினார். அதனால், இவர் தமது பெயரைத் "தைரியநாதர்" என்று மாற்றிக் கொண்டார். பின்னாளில் மக்கள் இவரை வீரமாமுனிவர் என்றே அழைத்தனர்.
வீரமாமுனிவர் அவர்கள் தம் தாய்மொழி அல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம். அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவராக, உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராகத் திகழ்ந்தார்.இத்தாலி நாட்டில் பிறந்து, தமது முப்பதாம் வயதிலேயே தமிழகம் வந்த அவர். இயேசுநாதரின் வரலாற்றைத் தமிழில் கூறும் "தேம்பாவணி" எனப்படும் காப்பியம் ஒன்றையும் இயற்றினார். தமிழில் சதுரகராதியைப் படைத்ததால். "தமிழ் அகராதியின் தந்தை" என்றும் போற்றப்படுகிறார். மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலையும் எழுதியுள்ளார். திறக்குறளில் அறத்தையும் பொருளையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம். ஞானக் கண்ணாடி. செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருகதை. வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்த வீரமாமுனிவர் அவர்கள் 1747.ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே இயற்கை எய்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் "தமிழ் அகராதியின் தந்தை" வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய பெருமைகளைப் போற்றுகின்ற வகையில், தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் அவர்களுக்குத் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்றைப் புதிதாக அமைத்து, 22.1.2024 அன்று திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 8 ஆம் நாள் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், மேயர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்.