நாளை முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு..!!
சென்னை: நாளை (அக்.14) முதல் 4 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; நாளை சட்டப்பேரவை கூடுகிறது. மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், ஜார்கண்ட் முதல்வராக இருந்த சிபு சோரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். மேலும், மறைந்த எம்எல்ஏ அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்படும். அக். 15ம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அக்.17ம் தேதி விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.