தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை திட்டத்திற்கு ரயில்வே அமைச்சர் ஒப்புதல்
டெல்லி: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை திட்டத்திற்கு ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை கடற்கரை முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு பிரதான பாதை ஆகும். மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதிகளவிலான பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது அமையும் 4வது ரயில் பாதை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும்.
ரயில்வே துறை அமைச்சர், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இடையே 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு (30.02 கி.மீ) ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டத்தின் தற்போதைய செலவு ரூ.713.56 கோடி என்றும், நிறைவுக்கான மொத்த மதிப்பீடு ரூ.757.18 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், இந்திய ரயில்வேயின் 'ஆற்றல், தாது மற்றும் சிமென்ட் போக்குவரத்து வழித்தடத்தின்' ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டு, தெற்கு ரயில்வேயால் திட்டத் தலைப்பு-15 (இரட்டிப்புப் பாதை)-இன் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
* திட்டத்தின் அவசியம்
தற்போது, தாம்பரம் - செங்கல்பட்டு பிரிவு, சென்னை கடற்கரை – விழுப்புரம் – திருச்சிராப்பள்ளி - கன்னியாகுமரி பிரதான பாதையில் மூன்று பாதைகளைக் கொண்டுள்ளது. இது புறநகர் ரயில், அஞ்சல், விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் எனப் பலதரப்பட்ட போக்குவரத்தைச் கையாள்கிறது. அதிகப் பயன்பாட்டினால் ஏற்படும் நெரிசல் காரணமாக, இந்த ரயில் பிரிவில் அடிக்கடி தாமதங்கள் ஏற்படுகின்றன, மேலும் இது கால அட்டவணை மற்றும் கொள்ளளவு விரிவாக்கத்தைப் பாதிக்கிறது.
தற்போது, இந்த பிரிவின் பாதை கொள்ளளவு பயன்பாடு சுமார் 87% ஆக உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படாவிட்டால், இது 136% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள 4வது பாதை நெரிசலைக் குறைக்கும், செங்கல்பட்டு வரை புறநகர் ரயில் சேவையை விரிவுபடுத்த உதவும், மேலும் சாலைப் போக்குவரத்தில் இருந்து ரயில்வேக்கு மாற்றத்தை ஊக்குவித்து, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும்.
* திட்டத்தின் நன்மைகள்
தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் புறநகர் போக்குவரத்து மற்றும் பெரிய அளவிலான குடியிருப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த 4வது பாதை தினமும் பயணம் செய்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்தப் புதிய பாதை, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும், நெரிசலைக் குறைக்கும், மேலும் வரவிருக்கும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் அதன் மூலம் புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை புறநகர் ரயில் சேவைகளைச் சீராக இயக்க உதவும். காஞ்சிபுரம் அருகே அமையவுள்ள விமான நிலையம் இந்த வழித்தடத்தில் பயணத் தேவையைக் கூட்டும்.
தாம்பரம் ஒரு பெரிய கோச்சிங் டெர்மினலாக மேம்படுத்தப்படும்போது, இந்த புதிய பாதை எதிர்கால போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும். இது புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகளைப் பிரித்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதோடு பயணிகளுக்கான பயண நேரத்தையும் குறைக்கும்.
ஒரகடம், படப்பை மற்றும் காஞ்சிபுரம் இடையே உள்ள பல தொழில் நிறுவனங்கள் மற்றும் சிப்காட்களை இந்த பகுதி உள்ளடக்குவதால், இந்தத் திட்டம் ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் செயல்படத் தொடங்கிய பிறகு ரூ.157 கோடி கூடுதல் வருமானம் ஈட்டப்படும்.
ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் இந்த முக்கியமான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தெற்கு ரயில்வே இந்த முக்கிய கொள்ளளவு விரிவாக்கப் பணியை விரைவில் தொடங்கத் தயாராக உள்ளது.