டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு புது ஜெர்சி
ராய்ப்பூர்: 10வது சர்வதேச டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள 8 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகளும் உள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 7ல் அமெரிக்காவுடன் மோத உள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் ஜெர்சி மாற்றப்பட்டுள்ளது. புதிய ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது. ராய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் ஜெர்சியை ரோஹித் சர்மா, திலக் வர்மா ஆகியோர் வெளியிட்டனர். புதிய ஜெர்சியில் ஊதா, காவி மற்றும் வெள்ளை நிறங்களும் விளம்பரதாரர்களின் லோகோக்களும் இடம் பெற்றுள்ளன.