டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை; டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'துணிச்சல் வழிகாட்டும்போது வரலாறு படைக்கப்படுகிறது. அறிமுக டி20 உலகக் கோப்பையை வென்ற மகளிர் பார்வையற்றோர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்' என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கொழும்பு நகரில் இன்று நடைபெற்ற முதலாவது பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நேபாள அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி ஒரு தோல்வியையும் சந்திக்காமல் ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்திய இந்த உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதலில் களமிறங்கிய நேபாள மகளிர் அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நேபாள அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
115 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கியது. இந்திய அணி 100 ரன்களை 10 ஓவர்களுக்குள்ளேயே எட்டியது. இறுதியில், 12.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பினரிடம் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'துணிச்சல் வழிகாட்டும்போது வரலாறு படைக்கப்படுகிறது. அறிமுக டி20 உலகக் கோப்பையை வென்ற மகளிர் பார்வையற்றோர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு உத்வேகமாகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்' என முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.