3வது டி20யில் சாம்சனுக்கு வாய்ப்பளிக்கலாம்: மாஜி வீரர் பொல்லாக் யோசனை
மும்பை: இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க யோசிக்கலாம் என்று முன்னாள் வீரர் பொல்லாக் தெரிவித்துள்ளார். சண்டிகரில் நடந்த 2வது டி20 போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. இந்தியாவின் டாப் ஆர்டரில் சுப்மன் கில்லின் மோசமான டி20 ஃபார்ம் தொடர்கிறது. முதல் போட்டியில் 4 ரன்கள் எடுத்தவர், 2வது போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆனார். ஆசிய கோப்பை தொடங்கியதிலிருந்து, சாம்சனுக்குப் பதிலாக கில்லே தொடக்க வீரராக களமிறங்குகிறார். கேப்டன் சூர்யகுமார் கீழ்வரிசையில் ஆடிய சாம்சனின் இடத்தை, கடைசி 5 போட்டிகளில் ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக மாறியுள்ளார்.
இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் பொல்லாக் கூறியதாவது:- அணி மாற்றம் தற்போது ஒரு பெரிய விவாதமாகி விடும் என்பதால், இப்போது அவர்கள் (இந்தியா) இதைச் செய்ய மாட்டார்கள். ஆனால் அடுத்தடுத்து டி20 போட்டியில் சாம்சனை கொண்டு வருவது குறித்து யோசிக்கலாம். ஆனால் போட்டியில் வென்றபோது மாற்றாத அணி, தோற்றபோதும் மாற்றம் செய்ய கூடாது. இன்னும் ஒரு போட்டிக்கு பிறகு மாற்றம் குறித்து சிந்திக்கலாம். ஒருவேளை அர்ஷ்தீப் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதால், ஹர்ஷித் அவருக்குப் பதிலாக இடம்பிடிக்கலாம். சூர்யாவின் ஃபார்முக்கு, சில சமயங்களில் ஒரு இடைவெளி தேவைப்படும். அல்லது அவர் பேட்டிங் வரிசையில் கீழ் இறங்கி சிறிது காலம் வேறு ஒரு பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.