சின்னம் முடங்கியதால் மாற்றுக்கட்சிக்கு தாவும் முடிவில் மாம்பழக்கட்சியினர் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கோட்டையானவரை தெர்மாகோல்காரர் வெளுத்து வாங்கியது கட்சி தலைமையின் கோபத்தை கொஞ்சம் தணிக்கத்தானாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரில் இலைக்கட்சி மாஜியான தெர்மாகோல்காரர் சில நாட்களுக்கு முன்பு கோட்டையானவர் கட்சியிலிருந்து வெளியேறியபோது, ‘எனக்கும் தான் மன வருத்தமிருக்கிறது’ என பேட்டியளித்து, தனது அதிருப்தியை வெளிப்படுத்தி விமர்சனத்திற்கு ஆளானார். கோட்டையானவருடன் நெருக்கத்தில் இருந்ததன் வெளிப்பாடாகவே இந்த வார்த்தை அவரிடமிருந்து வந்து விழுந்தது. அத்தோடு நாளுக்கு நாள் கோட்டையானவரோடு நெருக்கமாக தெர்மாகோல்காரர் இருந்ததும் கட்சி வட்டாரத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது.. சின்ன மம்மி மற்றும் பலாப்பழக்காரரை ஆதரித்தவர் என்ற முறையில் சேலத்துக்காரர் தெர்மாகோல்காரர் மீது எப்போதுமே ஒரு கண் வைத்திருப்பாராம்.. அத்தோடு எப்போது பிரசாரம் வந்தாலும் பெரிய இடத்தை பார்த்து, அதிக வரவேற்போ, செலவினத்தையோ தெர்மாகோல்காரர் ஏற்பதில்லை என்ற நிலையில், தலைமைக்கு இவர் மீது அவ்வளவாக ஈர்ப்பில்லை. இப்போது கோட்டையானவரோடு நெருக்கம் காட்டி வருவது தெரிந்து தலைமை ஆத்திரத்தில் இருப்பதை அரசல் புரசலாக அறிந்த தெர்மாகோல்காரர் பதறிப்போய், சமீபத்து பிரஸ்மீட்டில், ‘அவர் ஆலமரத்தின் பழுத்த இலை, மனுஷனா, ரோசமுள்ளவரா?’ என்றெல்லாம் கோட்டையானவரை வெளுத்து வாங்கி, தலைமையின் கோபத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கிறாராம்.. ஆனாலும் கட்சித் தலைமை தெர்மாகோல்காரரை முழுசாக நம்பாதுங்க என்கின்றனர் உடன் வலம் வரும் மூத்த இலைக்கட்சி நிர்வாகிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைமைக்கு தன்னோட பலத்தை காட்ட நடிகர் கட்சிக்கு தாவிய செங்கிஸ்கான் தயாராகிட்டு வருகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடந்த வாரம் இலைக்கட்சி தலைமை செங்கிஸ்கானின் சொந்த ஊரில் கூட்டத்தை கூட்டி கெத்து காட்டியதாம்.. இந்த கூட்டத்திற்கு இலைகட்சி தலைமையோட சொந்த ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தின் மைய பகுதியில் நிற்க வைத்து துரோகி ஒழிக, துரோகி ஒழிக என செங்கிஸ்கானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்களாம்.. இதன் வீடியோ காட்சிகளை செங்ஸ் கவனத்திற்கு ஆதரவாளர்கள் கொண்டு போயிருக்காங்க.. துரோகி பட்டம் கட்டுகிற அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன். பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்னு சொல்றது துரோகியான்னு கேள்வி எழுப்பினாராம்.. அதோடு நானும் அதே இடத்துல கூட்டத்தை கூட்டி என்னுடைய பலம் என்ன என இலைக்கட்சி தலைமைக்கு காட்டப்போறேன்னு கையை முறுக்கி இருக்கிறார்.. ஆனா இலைக்கட்சி கூட்டம் நடத்திய இடம் மிகவும் குறுகலான இடம் என்பதால் கரூர் சம்பவம் போல ஏதாவது நடந்தால் என்ன செய்வது என நினைத்து சொந்த ஊரில் கூட்டம் நடத்தும் முடிவை கைவிட்டாராம்.. அதன் பிறகு தான் மஞ்சள் மாவட்ட தலைநகரின் புறநகர் பகுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சின்னம் முடக்கத்தை நினைத்து மாற்றுக்கட்சிக்கு தாவும் யோசனையில் மாம்பழக்கட்சியினரின் மனசு அலைபாயுதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தந்தைக்கும், தனயனுக்கும் இடையே நடைபெறும் கட்சி அதிகார போட்டி பஞ்சாயத்து தற்போது டெல்லி வரை சென்றுள்ளது இங்குள்ள சொந்தங்களிடையே கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.. இந்த பஞ்சாயத்தில் சின்னத்தை முடக்கிவிட்டால் அவ்வளவுதான் என்பதால், கூட்டணியில் சேர்ந்து எந்த சின்னத்தில் தந்தையின் பின்னால் இருப்பவர்களும், தனயனின் பின்னால் இருப்பவர்களும் நிற்பார்கள் என்ற கவலையால் இந்த பஞ்சாயத்து இப்போதைக்கு தீர வாய்ப்பே இல்லையாம்.. அதனால நமது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒன்று நடிகரின் கட்சியில் இணைவது அல்லது இரண்டு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒன்றில் இணைவது என்ற யோசனையில் வெயிலூர், மிஸ்டர் பத்தூர், குயின்பேட்டை மாவட்ட மாம்பழக்கட்சியின் ‘முக்கிய’ சொந்தங்கள் இருக்கிறார்களாம்.. இவர்களது இந்த அலைபாயும் மனதை மோப்பம் பிடித்துள்ள இதர கட்சிகள் குறிப்பாக நடிகரின் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள், அவர்களுக்கு பொறுப்பு ஆசை காண்பித்து வலைவீசி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போலி மருந்து விற்பனை விவகாரம் பூதாகரமாகி மலராத கட்சி கொடுக்கும் புதுநெருக்கடியால் புல்லட்சாமி அதிருப்தியில் இருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தென்மாநில யூனியனான புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் பூதாகரமாகி இருக்கிறதாம்.. இதன் முக்கிய குற்றவாளி வீட்டில் சிபிசிஐடி காக்கிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் சிக்கியிருக்கு.. போலி மருந்துகள் விற்றதற்கான ஆவணங்கள் மட்டுமின்றி முக்கிய டைரியும் மாட்டியதாம்..
அதில் மருந்து தொழிற்சாலை அமைக்க உதவிய புதுச்சேரி மட்டுமின்றி அண்டை மாநிலத்தைச் சேர்ந்த சில அரசியல் புள்ளிகள், உடந்தையாக இருந்த அதிகாரிகளின் பெயர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட ப விட்டமின் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளதாம்.. இதனால் அரசியல் பிரபலங்கள் சிலர் கதிகலக்கத்தில் இருக்கிறார்களாம்.. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு சூரிய கட்சியினர் சபையை முற்றுகையிட, மலராத கட்சியோ ஒருபடி மேலே போய் யூனியனின் பவர்புல் நிர்வாகியை சந்தித்து சிபிஐ.யை அழைக்குமாறு மனு அளித்து புதுநெருக்கடி கொடுத்து உள்ளார்களாம்.. இதனால் மருந்து துறையை கவனிக்கும் புல்லட்சாமி தரப்பு கடும் அதிருப்தியில் இருக்காராம்..’’ என்றார் விக்கியானந்தா.