நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் உள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் விளம்பரம் செய்ய தடை!!
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு பற்றி விளம்பரம் செய்யும் கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை குறிப்பிட ரியல் எஸ்டேட் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவதில், கட்டுமான நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக சிறப்பான வடிவமைப்பு, விலையில் சலுகை, சிறப்பு பரிசுகள் என்ற ரீதியில் கட்டுமான நிறுவனங்கள் இடையே இருந்த தொழில் போட்டி, தற்போது சிறப்பு வசதிகளை பட்டியலிடும் முறைக்கு மாறி உள்ளது. ஆரம்பத்தில் 20 முதல் 25 வரை இருந்த சிறப்பு வசதிகள் பட்டியல் தற்போது 150 முதல் 250 வரை நீண்டுள்ளது.
இந்த வசதிகள் எல்லாம் தேவையா என்பதை கூட அறிய முடியாமல், வீடு வாங்குவோர் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.குறிப்பிட்ட சில நிறுவனங்கள், அதிக வசதிகள் குறித்த பட்டியலை வெளியிடும் போது, நடுத்தர மற்றும் சிறிய கட்டுமான நிறுவனங்களின் திட்டங்கள் ஓரங்கட்டப்படும் சூழலும் உருவாகிறது. இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணையத்துக்கு புகார்கள் குவிந்தன. புகாரின் அடிப்படையில் கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை வெளியிடுவதற்கு, ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் உள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையத்திடம் கட்டுமான நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.