பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் :தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
டெல்லி :பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலில் 65.2 லட்சம் வாககாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
அதில், பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட முடியாது என்றும் அந்த விவரங்களை கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது. இதனிடையே மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் யார்? இறந்தவர்கள், புலம் பெயர்ந்த வாக்காளர்கள் என்ற காரணத்தை குறிப்பிட்டு பட்டியலை வெளியிட வேண்டும். நீக்கப்பட்டதற்கான காரணத்தை இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆதாரையும் ஆவணமாக அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.