பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு
டெல்லி : பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பணியாற்றியபோது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்ளிட்டோர் சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, பொன் மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர்பாட்சா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டது. அதன்பேரில், அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதற்கிடையே, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை தனக்கு வழங்க உத்தரவிடுமாறும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, பொன் மாணிக்கவேல் மீது பதிவான வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனிடையே பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காதர்பாட்சா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தபோது பழிவாங்கும் நோக்கில் பொன் மாணிக்கவேல் தன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் மனுவில் குற்றம் சாட்டி உள்ளார். இந்த நிலையில், தன்னுடைய தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என பொன் மாணிக்கவேல் கேவியட் மனு தாக்கல் செய்தார்.