மிக இளம் வயதிலேயே மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: 9ம் வகுப்பில் இருந்து அல்ல மிக இளம் வயதிலேயே மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று போக்சோ சட்டத்தின் கீழ் கைதான 15 வயது சிறுவனுக்கு ஜாமின் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தார். சிறுவனுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் ஜாமின் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அந்த சிறுவன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அராதே அமர்வு சிறுவனுக்கு ஜாமின் வழங்கியது. மேலும் உத்தரப் பிரதேச அரசு, பள்ளிகளில் பாலியல் கல்வி எவ்வாறு நடைமுறையில் உள்ளது என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், 'ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன வழிகாட்டுதலின் அடிப்படையில், பாலியல் கல்விக்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என, கூறப்பட்டிருந்தது.இதை கேட்ட நீதிபதிகள், 'பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பாலியல் கல்வியின் நிலை போதுமானது அல்ல. குழந்தைகள் பருவமடையும் காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்கள் குறித்து அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும். ஒன்பதாம் வகுப்புக்கு முன்பே, மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்பது எங்கள் கருத்து. இதில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.' என்று குறிப்பிட்டனர்.