ஆவடி அருகே பரபரப்பு; துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை
ஆவடி: ஆவடி அருகே துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடி அடுத்த கோவில்பதாகை கலைஞர்நகர் 1வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (55). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி ஆவடி வீராபுரம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இளைய மகள் ரூபகலா (31) துணை நடிகையாக இருந்து வந்தார். சினிமா மற்றும் சின்ன திரையில் நடித்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்குவதற்காக ரூபகலா படுக்கையறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த அசோக்குமார், படுக்கையறைக்கு சென்று பார்த்தபோது ரூபகலா மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் பார்த்தபோது ரூபகலா பிணமாக தொங்கியது தெரியவந்தது. பின்னர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். துணை நடிக்கை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆவடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.