மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கைதான 3 பேரும் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைப்பு: மேலும் ஒரு வழக்கில் கைது
கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை கத்திமுனையில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்குப்பின் சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் ஒரு நாள் காவலில் விசாரிக்க பீளமேடு போலீசாருக்கு நேற்று முன்தினம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நேற்று மாலை 4 மணியுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து 3 பேரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக 3 பேரும் அளித்த வாக்குமூலத்தை போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர்.
அவர்களால் நடக்க முடியாத காரணத்தால் பாதுகாப்பு கருதி சம்பவ இடத்துக்கு போலீசார் அழைத்து செல்வதை தவிர்த்தனர். இவர்கள் போலீஸ்காரர் சந்திரசேகரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அதற்கான ஆணையை போலீசார் நேற்றுமுன்தினம் அவர்களிடம் வழங்கினர்.