எனக்கு நீ வேணும் புள்ள... என்கூட இருப்பியா? மாணவியை அழைத்த பேராசிரியர் சஸ்பெண்ட்: ஆடியோ வைரலால் அதிரடி
முசிறி: அரசு கலைக்கல்லூரியில் மாணவியை ஆசைக்கு இணங்கும்படி பேராசிரியர் பேசிய ஆடியோ வைரலானதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து இணை இயக்குனர் நேற்று உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நாகராஜன்(52). இவர், முதலாம் ஆண்டு பயிலும் 17 வயதான மாற்றுத்திறனாளி மாணவி மற்றும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பேராசிரியரும், மாணவியும் பேசிய ஆடியோ வைரலானது. அதன் விவரம்:
* பேராசிரியர் நாகராஜன்: எனக்கு நீ வேணும் புள்ள. எதா இருந்தாலும் இப்ப சொல்லு.
* மாணவி : சார் நிறைய பொண்ணுங்க இருக்காங்க. என்னை மட்டும் ஏன் உங்களுக்கு பிடிச்சிருக்கு. அனுமதி இன்றி என்னை தொடக்கூடாது.
* பேராசிரியர்:உன்ன எனக்கு பிடிக்கும். அதனால் உன்கிட்ட மட்டும்தான் நான் கேட்க முடியும். என்கூட இருப்பியா? மாட்டியா?... அத மட்டும் சொல்லு.
* மாணவி: இருப்பேன்.
* பேராசிரியர்: உன்கிட்ட இருக்கிற எல்லா விசயமும் எனக்கு கிடைக்குமா? கிடைக்காதா?...
* மாணவி: எல்ல விசயமும்னா.. புரியலை…
* பேராசிரியர்: திங்கள் கிழமை நான் அங்க தான் பிள்ள இருப்பேன்… நீ இப்ப வந்தீனாக்கூட நான் அங்க தான் இருப்பேன்.. அஞ்சு மணி வரைக்கும். நான் சொல்றத கேளு. டிபார்ட்மெண்ட்ல வந்து யாரும் இருக்க வேணாம்னு சொல்லிட்டு சிஎல்பி போகச்சொல்லிட்டு நான் திரும்ப ரெண்டரை மணிக்கு சிஎல்பில இருந்து டிபார்ட்மெண்டுக்கு வந்துருவேன். நீ யாரு கேட்டாலும் ஹாஸ்டல்ல இருந்து அக்கா வரேன்னு சொல்லியிருக்காங்க… நான் அவங்க கூட போயிருவேன்.. அப்படின்னு சொல்லிட்டு இரு… கரெக்டா நான் உனக்கு போன் பன்றேன்.
* மாணவி: எனக்கு பயமா இருக்கு.. எனக்கு தனியாலாம் இருக்க முடியாது.
* பேராசிரியர்: இல்லடா… ரெண்டரை மணிக்கு எல்லாரும் போயிருவாங்க.. நான் மட்டும் தான் இருப்பேன். அப்ப நீ வந்து சேரு. சரியா.
* மாணவி: எனக்கு பயமா இருக்கு…
* பேராசிரியர்: ஆமா… உன் அனுமதியில்லாம உன்ன தொடக்கூடாது… கட்டிப்பிடிக்க கூடாது… முத்தம் கொடுக்க கூடாது எதுவுமே இல்லாம நான் எதுக்கு உனக்கு?..
பேராசிரியர் நாகராஜனுக்கும், மாணவிக்கும் இடையே இவ்வாறு உரையாடல் 9 நிமிடம் 36 செகண்ட் தொடர்கிறது. இதுபோன்று ஏழு ஆடியோவாக வெளிவந்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் உத்தரவின் பேரில், கல்லூரி புகார் உள்விசாரணை கமிட்டி மற்றும் மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் நாகராஜனிடம் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை விசாரணை நடத்தினார்.. இந்நிலையில் நேற்று பேராசிரியர் நாகராஜனை சஸ்பெண்ட் செய்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.