இயந்திர வாழ்க்கையில் சவால்கள் ஏராளம் ஐம்பூதங்களை எதிர்கொண்டு சாதிக்கும் மாணவச் செல்வங்கள்: சர்வதேச நாளில் பெருமிதம்
1934ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த 1200க்கும் மேற்பட்ட ப்ராக் பல்கலைக்கழக மாணவர்களை நினைவு கூறும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் கல்வியின் மதிப்பை வலியுறுத்த வேண்டும். உலகம் முழுவதும் உள்ள மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்க வேண்டும். சர்வதேச அளவில் மாணவர்களுக்கான தடைகளை நீக்க வேண்டும். கலாச்சார பிளவுகளுக்கு மத்தியில் பிணைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே இந்தநாளின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதையொட்டி மாணவர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை, அவர்கள் நலன்சார்ந்த மேம்பாட்டு அமைப்புகள் வெளியிட்டு வருகிறது. இதுகுறித்து மாணவர் நலன்சார்ந்த மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: இயந்திரமயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் மாணவர்கள் பல்வேறு தடைகளை கடந்தே கல்வி கற்று, சாதனைகளையும் படைத்து வருகின்றனர்.
இதில் மொழி தடைகள், வளர்ப்பு அழுத்தம், நம்பத்தகாத எதிர்பார்ப்புகள், வீட்டில் உருவாகும் நெருக்கடிகள், நோய் என்ற ஐந்தும் சர்வதேச அளவில் அவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. இன்றைய சூழலில் பள்ளிக்கல்வி கற்கவே பல மாணவர்கள், மாநிலம் கடந்தும், நாடு கடந்தும் செல்கின்றனர். அதிலும் உலகளவில் 23 சதவீதம் மாணவர்கள் உயர்கல்விக்கு வெளிநாடுகளில் செல்ல விரும்புவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இப்படி செல்லும் போது முதலில் அவர்கள் எதிர்கொள்வது மொழிப்பிரச்னை தான். இது பரஸ்பரம் புரிதலை ஏற்படுத்த தடையாக அமைந்து விடும். இதற்கடுத்து வளர்ப்பு அழுத்தம். நமது வீடு மற்றும் கலாச்சாரம் வேறுபட்டதாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் சக மாணவர்களை புரிந்து கொள்வதும், அவர்களோடு மனம் ஒத்துப்போவதும் முதலில் பெரும் சிரமமாகவே இருக்கும்.
அடுத்த பிரச்னையாக இருப்பது நம்பத்தகாத எதிர்பார்ப்புகள். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக பணத்தையும், நேரத்தையும் அதிகமாக செலவிடுவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதை குழந்தைகள் மட்டுமன்றி, தங்கள் குடும்பத்தின் எதிர்கால மேம்பாட்டுக்கான முதலீடாகவே அவர்கள் நினைக்கின்றனர்.தங்கள் பிள்ளைகளுக்கான விருப்பம் என்பதை விட, தாங்கள் விரும்பும் திணிப்பையே அவர்களிடம் உருவாக்குகின்றனர். இதை எதிர்கொண்டு அவர்கள் படித்து சாதிப்பதும் பெரும் சவாலாக உள்ளது. இதற்கடுத்து வருவது வீட்டில் உருவாகும் நெருக்கடிகள். வீட்டில் இருப்போருக்கு கடுமையான நோய் பாதிப்பு, பெற்றோருக்கு இடையே ஏற்படும் விவாகரத்து போன்ற கருத்துவேறுபாடுகள், நெருங்கிய உறவுகளின் இழப்பு, போர் மற்றும் கலவரச் சூழல்களும் மாணவர்களின் மனதில் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதுவும் அவர்களின் படிப்புக்கும், உயர்வுக்கும் தடைக்கல்லாக மாறுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக இருப்பது உடல்நலம் சார்ந்த நோய் பாதிப்புகள். ஒரு காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு வந்த ரத்தஅழுத்தம், இதயபாதிப்புகள், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகள் தற்போது மாணவப்பருவத்திலேயே பலருக்கு வந்து விடுவதாக ஆய்வுகள் சொல்கிறது. மாணவர்களின் உணவுப்பழக்கமும் இதற்கொரு முக்கியகாரணம். கடந்த காலங்களை பொறுத்தவரை மாணவர்கள் சாதிப்பதற்கு பொருளாதார சிக்கல்கள் தான் பெரும் தடையாக இருந்தது. ஆனால் இன்றைய நவீனயுகத்தில் கல்விக்கான வழிகாட்டுதல்கள் ஏராளமாக உள்ளது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் இலக்கை அடையவும், தனித்துவத்தை காட்டவும் ஒரே நேரத்தில் ஓட வேண்டியுள்ளது. இதிலும் மொழித்தடை, மாறுபட்ட வாழ்க்கை சூழல், பெரும் எதிர்பார்ப்பு, நெருக்கடிகள், நோய்பாதிப்புகள் என்ற ஐம்பூதங்களையும் எதிர்கொண்டு வீழ்த்தி வெற்றி பெற்று சாதிப்பது என்பது பெரும் பாராட்டுக்குரியது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
57 சதவீதம் பேருக்கு மனநலக் கவலைகள்
சமீபத்திய ஆண்டுகளில் மாணவர் சமூகத்தில் மனநலக்கவலைகள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அமெரிக்கன் காலேஜ் ஹெல்த்அசோசியேஷன் நடத்திய ஆய்வில், ‘உலகளவில் 57 சதவீதம் மாணவர்கள் மனநலக்கவலைகளில் சிக்கியுள்ளனர். 34 சதவீதம் பேர், தங்களது அன்றாட வாழ்வு பாதிக்கும் வகையில் கடுமையான மனச்சோர்வை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளது. இதேபோல் இந்தியாவில் 12 முதல் 13 சதவீதம் மாணவர்கள் உளவியல், உணர்ச்சி மற்றும் நடத்தை சவால்களால் பாதிக்கப்படுகின்றனர். அதிகமான கல்விச்சுமை, சமூக எதிர்பார்ப்புகளே இதற்கு காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
உடற்கல்வி என்பது சரிவர கிடைப்பதில்லை
‘‘மாணவர்களுக்கு கல்வி என்பது எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல் உடற்கல்வியும் மிகவும் அவசியமானது. ஆனால் உலகளவில் பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு குறைந்தபட்ச உடற்கல்விக்கான அணுகல் இல்லை என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. குளோபல் ஸ்ேடட்ஆப் பிளே அறிக்கையின் படி 58% நாடுகள் மட்டுமே பெண் குழந்தைகளுக்கு உடற்கல்வியை கட்டாயமாக்கி உள்ளது. 7% பள்ளிகள் மட்டுமே ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான உடற்கல்வியை நிறுவியுள்ளது. இடைநிலைப்பள்ளி மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கும், ஆரம்பபள்ளி மாணவர்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கும் குறைந்தபட்ச வாராந்திர உடற்பயிற்சிகள் கூட கற்பிக்கப்படவில்லை,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.