தோழி விடுதி கட்டுவதை எதிர்த்து வழக்கு மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: படிப்பில் கவனம் செலுத்த ஐகோர்ட் அறிவுரை
சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் தோழி விடுதி கட்ட தடை கோரிய வழக்கை ரூ.10,000 அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் விடுதி அமைந்துள்ள இடத்தில் பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விடுதி கட்டும் பணிக்கு தடை விதிக்கக்கோரி பல்கலைக்கழக முதுகலை மாணவர் நவீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், விடுதி கட்டுமான பணி காரணமாக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், விடுதி கட்டும் பணியை கைவிடக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது போன்ற தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்வதை கைவிட்டு சம்பந்தப்பட்ட மாணவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி 10,000 ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.