ராமேஸ்வரத்தில் 2வது நாளாக ஸ்டிரைக்: தங்கச்சிமடத்தில் மீனவர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். தங்கச்சிமடத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 9ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், இலங்கை வசம் உள்ள 49 மீனவர்கள், 9 படகுகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இவர்களது போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தையொட்டி தங்கச்சிமடத்தில் நாளை (13ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டமும், 19ம் தேதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.