தெருநாய்கள் கடித்து குதறியதில் 13 வயது சிறுமி பலி: மத்திய பிரதேசத்தில் பயங்கரம்
போபால்: மத்திய பிரதேச மாநிலம், சியோனி மாவட்டம், சம்னாபூர் கிராமத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் அவ்னி வினோகே (13) என்ற சிறுமி, தெருநாய்கள் கூட்டமாக கடித்துக் குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நேற்று மாலை 4 மணியளவில், தனது தோழியுடன் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு அருகில் உள்ள வயல்வெளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, வழியில் தெருநாய்க் கூட்டம் ஒன்று அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
அவருடன் சென்ற தோழி, நாய்களிடமிருந்து தப்பித்து ஓடி, சிறுமியின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தார். ஆனால், அவ்னியை நாய்கள் கீழே தள்ளி, அவரது கழுத்து மற்றும் கைகளில் கொடூரமாகக் கடித்தன. தகவலறிந்து கிராம மக்கள் ஓடி வருவதற்குள், சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகிலுள்ள சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்று, பின்னர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.