தெரு நாய்கள் பிரச்சனைக்கு அதிகாரிகளின் செயலற்ற தன்மையே காரணம் : உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி : தெரு நாய்கள் பிரச்சனைக்கு அதிகாரிகளின் செயலற்ற தன்மையே காரணம் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாய்கள் பிடிக்கப்படும் போது நாய்கள் நல ஆர்வலர்கள் தலையிட்டால் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு..
ஒன்றிய அரசு தரப்பில் வாதிட்ட சாலிசிட்டர் ஜெனரல்: நாய் நலம் விரும்பிகள் குரல் அதிகமாக பொதுவெளியில் பேசப்படுகிறது. ஆனால் பாதிக்கப்படும் குழந்தைகள், உயிரிழக்கும் சிறுவர்கள் குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு 10,000 நாய் கடி சம்பவங்கள் நடைபெறுகிறது. பலர் உயிரிழக்கிறார்கள். இதற்கு தீர்வு காண்பது அவசியம். அதற்கு ஏற்ப உத்தரவிட வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் : நாய்களுக்கான கருத்தடை என்பது முறையாக நடைபெறுவதில்லை. அரசு முறையாக அதனை செயல்படுத்துவதில்லை. தற்போது காப்பகங்கள் இல்லாத நிலையில் நாய்களை பிடித்து அடைப்பது சிக்கலாக உள்ளது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மேம்போக்கான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டாம், அரசின் செயலற்ற தன்மையால் இந்நிலை உருவாகியுள்ளது, தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்கனவே விதிமுறைகளும் சட்டங்களும் உள்ளன, ஆனால் அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை. தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம், "இவ்வாறு தெரிவித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.