2 நாள் அரசு முறைப் பயணமாக பூட்டான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி: 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் புறப்பட்டார். அண்டை நாடான பூடான், இந்தியாவுடன் சிறந்த நட்புறவை பேணி வருகிறது. இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் புறப்பட்டுள்ளார். பூடானில் 2 நாள் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் சேர்ந்து இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்கிறார். மேலும் பிரதமர் ஷெரிங் தோப்கேவையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.
இதைப்போல பூடானின் முன்னாள் மன்னர் ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் இந்த பயணத்தின்போது, பூடானில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள 1020 மெகாவாட் நீர் மின் நிலையத்தை அந்த நாட்டு மன்னருடன் சேர்ந்து திறந்து வைக்க உள்ளார். அதேபோல் பூட்டான் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலகளாவிய அமைதி பிராத்தனை நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். பிரதமரின் பயணம் இரு தரப்பு நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என ஒன்றிய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.