திருவிளையாட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
*சர்க்கரை நோய் பரிசோதனைக்கு குவிந்த பெண்கள்
தரங்கம்பாடி : திருவிளையாட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனைக்கு பெண்கள் குவிந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து, அதன்படி கடந்த 2.8.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளில் இம்முகாம் நடைபெறுகிறது. ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே இடத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது. மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன்முறை மருத்துவம்.பல் மருத்துவம், கண் மருத்துவம், மன நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம் ஆகிய மருத்துவ சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
அதுமட்டுமில்லாமல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்றவைகள் பெறுவதற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் செய்யப்படுகிறது. அதற்காக பெண்கள் பெரும் அளவில் ரத்த பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளும் 10 களப்பணியாளர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்பிலான கையடக்க கணினிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இதில் துணை இயக்குநர் டாக்டர் அஜீத் பிரபுகுமார், சீர்காழி ஆர்டிஓ சுரேஷ், வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தன், தாசில்தார் சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.